கோடியக்கரை கடலில் 3 மீனவர்கள் மாயம்: கவலையில் மீனவர்கள் குடும்பங்கள்
நாகை: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 3 பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்ன என்று தெரியாததால் அவர்கள் குடும்பத்தார் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (36).மீனவர்.அவரது சொந்த படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குமரவேல்(30), ஜெயராமன்(55) ஆகியோர் கடந்த 9-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் 3 பேரும் கோடியக்கரையில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று காலையில் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இதையடுத்து நேற்று மாலை 10 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட அப்பகுதி மீனவர்கள் காணாமல் போனவர்களைத் தேடச் சென்றனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனால் அக்கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர். 3 மீனவர்கள் காணாமல் போயிருப்பதால் ஆறுகாட்டுதுறை மீனவர்கள் 1000 பேர் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இந்த சம்பவம் குறித்து மீன்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.