நிலத்தகராறில் விவசாயியைக் கொன்ற 5 வாலிபர்களுக்கு ஆயுள்தண்டனை
நெல்லை: நெல்லையில் நிலதகராறில் விவசாயியை கொன்ற 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை டவுன் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் செல்லப்பா. விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் சுந்தரர் தெருவைச் சேர்ந்த ஸ்ரீரங்கதேவர் என்பவர் தண்ணீர் பாய்ச்சி வந்தார். திடீரென அவர் இறந்து விட்டதை அடுத்து செல்லப்பா அந்த நிலத்தை வேறொவருக்கு விற்க முயன்றார். இதை அறிந்த ஸ்ரீரங்கதேவர் மகன் ஐயப்பன் என்பவர் நிலத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்து அவருடன் தகராறு செய்தார். ஆனால் அதையும் மீறி செல்லப்பா தனது நிலத்தை விற்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் அவரது கூட்டாளிகள் டவுன் ராஜபாண்டி மகன் மணி, செய்துநங்கநல்லூர் திருமலை மகன் சுப்பிரமணியன், சிஎன் கிராமம் நயினார் மகன் முருகன், டவுன் வயல் தெரு வேல்தேவர் மகன் மாரி என்ற மாரியப்பன் ஆகியோர் சேர்ந்து கடந்த 12-1-2008 அன்று செல்லப்பாவை வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக டவுன் போலீசார் ஐயப்பன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை 2வது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி கமலா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 5 பேருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.