பாமாயில் ஊழல் வழக்கில் உம்மன் சாண்டிக்கு தொடர்பு?-மீண்டும் விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் எதிர்கட்சித் தலைவர் உம்மன் சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கருணாகரன் ஆட்சிகாலத்தில் நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியான அப்போதைய உணவுத் துறை அமைச்சர் முஸ்தபா சமீபத்தில் திருவனந்தபுரம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
பாமாயில் இறக்குமதி குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்த உம்மன் சாண்டிக்கு தெரியும். ஆனால் அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. எனவே, என்னையும் விடுவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வருவதால் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொண்ட இடதுசாரி அரசு உடனடியாக லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.
அதில் பாமாயில் இறக்குமதி குறித்து உம்மன் சாண்டிக்கு தெரியும் என்று முஸ்தபா கூறியிருப்பதால் பாமாயில் ஊழல் வழக்கில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம். எனவே, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உம்மன் சாண்டி கூறுகையில்,
இந்த வழக்கி்ல் நான் குற்றவாளியாக சேர்க்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறிதது காங்கிரஸ் உயர்மட்ட குழுவிடம் தெரிவித்து விட்டேன். இந்த ஊழல் புகார் தேர்தலில் காங்கிரஸுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த ஆளும் கட்சியினர் செய்த சதி என்றார்.
இது குறித்து அச்சுதானந்தன் கூறுகையில், பாமாயில் ஊழல் வழக்கில் எதிர்கட்சித் தலைவரின் பங்கு குறித்து விசாரணையில் தெரிய வரும், இந்த வழக்கு தற்போது தான் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications