8 மட்டுமே தரும் ஜெ.-19ம் தேதி மதிமுக அவசர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Jayalalitha and Vaiko
சென்னை: மதிமுகவுக்கு 16 சீட்டாவது கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வெறும் 8 சீட்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பு கூறுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க மார்ச் 19ம் தேதி கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தை மதிமுக கூட்டியுள்ளது.

எத்தனையோ பேர் துரோகம் செய்து விட்டு வெளியேறியபோதெல்லாம் மலை போல நின்று ஜெயலலிதாவுக்கு துணையாக வந்த எங்களை அதிமுக இப்படியெல்லாம் நடத்தும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்றும் மதிமுகவினர் வேதனைப்படுகின்றனர்.

குட்டிக் குட்டிக் கட்சிகளுக்கெல்லாம் கூப்பிட்டு சீட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. சம்பந்தமே இல்லாமல் அதிமுக கூட்டணிக்கு வந்து சேர்ந்த தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தார் ஜெயலலிதா. அதேசமயம், கூடவே இருக்கும் இடதுசாரிகளையும், மதிமுகவையும் அவர் ஓரம் கட்டி வைத்திருந்தார். இதில் வேறு வழியில்லாமல் ஜெயலலிதா கொடுத்த தொகுதிகளை வாங்கிக் கொண்டு போய் விட்டனர் இடதுசாரிகள்.

ஆனால் மதிமுகவின் தன்மானத்திற்கு அது இழுக்கு என்று பெருத்த அமைதியும், பொறுமையும் காத்து வருகிறார் வைகோ.

அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலின்போது 35 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. இந்த முறையும் அதேஅளவில் எதிர்பார்த்தார் வைகோ. விஜயகாந்த்தைக் காரணம் காட்டி அது இயலாது என்று ஜெயலலிதா கூறவே, சரி என்று 25 தொகுதிகளாவது வேண்டும் என்று இறங்கி வந்தார் வைகோ. அதுவும் இயலாது என்று கூறினார் ஜெயலலிதா. சரி, 18 சீட்களாவது கொடுங்கள் என்று கேட்டபோது 10 சீட்தான் தர முடியும் என்று ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெறும் 8 சீட் மட்டுமே தர முடியும் என்று மதிமுகவுக்குத் தகவல் போயுள்ளதாம். இது மதிமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதிமுகவின் இந்த லேட்டஸ்ட் ஆபர் குறித்து தனது கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் வைகோ தீவிரஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வருகிற 19ம் தேதி கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தை மதிமுக கூட்டியுள்ளது.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் மார்ச் 19ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 19ம் தேதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கும்.

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிமுகவின் புதிய தகவல் குறித்து விரிவாக விவாதித்து கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே அதிமுக கொடுக்கும் தொகுதிகளை மதிமுக வாங்கிக் கொள்ளுமா அல்லது கூட்டணியிலிருந்து வெளியேறுமா என்பது அன்றுதான் தெரிய வரும்.

ஜெயலலிதாவின் அதீத தைரியம்:

ஜெயலலிதா, இப்படி போட்டு வைகோவை இழுத்தடிப்பதற்கு விஜயகாந்த் என்ற ஒரே காரணம்தான் என்கிறார்கள். விஜயகாந்த் கூட்டணியில் இருக்கிறார், நமது வெற்றி ஓட்டுக்களைப் பிரித்த விஜயகாந்த்தே நம்முடன் இருக்கும்போது யாரைப் பற்றியும் கவலை இல்லை என்று எடுத்தேன் கவிழ்த்தேன் நினைப்புதான் தற்போது ஜெயலலிதாவிடம் மேலோங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே இவ்வளவுதான் தர முடியும், முடிந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி வருகிறார் ஜெயலலிதா என்கிறார்கள்.

ஆனால் விஜயகாந்த் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமை இருந்தால் அது முட்டாள்தனமாகும் என்கிறார்கள் மதிமுகவினர். மதிமுக கடந்த முறை 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இருப்பினும் அதிமுகவின் வெற்றிக்கு மதிமுக முக்கியக் காரணமாக இருந்தது.

அதாவது அதிமுக வென்ற 61 தொகுதிகளில் 31 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. அங்கு மதிமுக மட்டும் இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் அதிமுக தோல்வியைத்தான் சந்திக்க நேரிட்டிருக்கும். மதிமுகவுக்கென்று அனைத்துத் தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் உள்ளன. இதை ஜெயலலிதா மறந்து விடக் கூடாது என்கிறார்கள் மதிமுகவினர்.

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்திலும் வைகோவுக்காகவே ஓட்டுப் போடுகிறவர்கள் நிறையப் பேர் உள்ளனர். கோவில்பட்டி, சங்கரன் கோவில் என அதிமுக போட்டியிட்ட பல தென்னக தொகுதிகளிலும் மதிமுக காரணமாகவே அதிமுகவெற்றி பெற்றது. இதை ஜெயலலிதா மறந்து விட்டார் என்கிறார்கள் மதிமுகவினர் வேதனையுடன்.

இதை விட முக்கியமாக அவர்கள் சொல்வது, வைகோ செய்த சூறாவளி பிரசாரம்தான். நாலு வார்த்தை கூட ஜெயலலிதா தெளிவாக பேசாத நிலையில் வைகோவின் சூறாவளிப் பிரசாரமும், எரிமலையாக பொங்கி அவர் பேசியதும் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தன.

தனது கட்சி வேட்பாளர்களை விட அதிமுக கூட்டணிதான் பெரிது என்று பெருந்தன்மையாக நினைத்து ஒட்டுமொத்த அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகவும் கடுமையாக பிரசாரம் செய்தார் வைகோ. லோக்சபா தேர்தலிலும் அவரது பேச்சும், பிரசாரமும்தான் அனைவரையும் கவர்ந்தது என்கிறார்கள் மதிமுகவினர்.

தாங்கள் கேட்ட சீட்களை அதிமுக ஒதுக்கவில்லை என்றவுடன் கூட்டம் போட்டு கெடு வைத்து மிரட்டியது சிபிஎம். ஆனால் எங்கள் தலைவர் வைகோ இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எங்கள் யாரையும் பேசக் கூடாது என்றும் அவர் கூறி விட்டார். அந்த அளவுக்கு அவர் ஜெயலலிதாவை மதிக்கிறார். இதையெலல்லாம் ஜெயலலிதா மனதில் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட மதிமுகவுக்கு தற்போது கையில் உள்ள 16 தொகுதிகளையாவது ஜெயலலிதா ஒதுக்க வேண்டும் என்று மதிமுகவினர் கோரி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+