வீரப்பன் மனைவி ஒரு வழக்கில் விடுதலை-இன்னொன்றில் சிறை
பெங்களூர்: பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி விடுவிக்கப்பட்டார். ஆனால் இன்னொரு வழக்கில் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன்மலை-மேட்டூர் சாலையில் உள்ளது பாலாறு பாலம். அதன் அருகே கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் போலீசார் மீது கண்ணி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் வனத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு போலீசார் உள்பட 22 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கொளத்தூர் மணி, ஆத்தூர் சிவசுப்பிரமணியம், பாப்பாத்தி உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விசாரணை சாம்ராஜ்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து முத்துலெட்சுமி உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டார்கள்.
கடந்த 1993-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி மாதேஸ்வரம் மலை அருகே வீரப்பனின் கூட்டாளிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் பலியான வழக்கில் முத்துலட்சுமியும், பாப்பாத்தியும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் இருவரும் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.