மதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ஓ.பி-செங்கோட்டையன் சமரச பேச்சு

அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வைகோவுக்கு உரிய மரியாதை கொடுக்காமல், கேவலமாக நடத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் அதிருப்தி அடைந்த மதிமுக இன்று தனது கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தை கூட்டியது. இடையில், ஜெயலலிதாவின் அவசரக்குடுக்கை செயல்பாட்டால் ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டன.
எல்லாம் கூடி வந்த நேரத்தில் அத்தனையும் தனக்கு எதிராக திரும்பியதைப் பார்த்து ஜெயலலிதாவும், அவரது ஆஸ்தான ஆலோசகர்களும் குழம்பிப் போயினர்.
இந்த நிலையில் தற்போது மதிமுகவையும் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தீவிரமாகியுள்ளது. இதற்காக இன்று காலை ஓ.பன்னீர் செல்வமும், கே.ஏ.செங்கோட்டையனும் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்திற்குச் சென்றனர்.
அங்கு வைகோவை அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது மதிமுக நிர்வாகிகள் மல்லை சத்யா, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு திட்டத்தை வைகோவிடம் தெரிவித்த அவர்கள் மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணையுமாறு கோரினர்.
அப்போது 23 இடங்கள் வேண்டும், குறைந்தபட்சம் 21 இடங்கள் கட்டாயம் வேண்டும் என்ற தனது நிலையை வைகோ விளக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து வைகோவிடம் பேசியதை ஜெயலலிதாவிடம் தெரிவிக்க ஓபியும் செங்கோட்டையனும் போயஸ் கார்டன் கிளம்பிச் சென்றனர்.
முன்னதாக மதிமுகவுக்கு 9 இடங்கள் தருவதாக ஜெயலலிதா கூறியதால் இன்று தனது கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை வைகோ கூட்டினார்.
அதில் ஏடாகூடாமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் வைகோவுடன் ஜெயலலிதா சமரசப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications