தமிழகத்தில் காட்டாட்சியை நடத்துகிறது திமுக-ஜெ. சாடல்
திருச்சி: தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா நேற்று திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று தனது பிரசாரத்தையும் ஜெயலலிதா தொடங்கினார்.
ஸ்ரீரங்கத்தில் அவர் வேனில் இருந்தபடியே பேசினார். அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சி ஒரு குடும்ப ஆட்சியாக மாறி விட்டது. திமுக ஆட்சி தமிழகத்தில் காட்டாட்சியை நடத்தி வருகிறது. சட்டம் ஒழுங்கு இல்லாமலேயே போய் விட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் உள்ள தொடர்புகளால் தமிழகத்தின் பெயர் நாடு தழுவிய அளவில் கெட்டுப் போய் விட்டது.
விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவும் அங்கம் வகித்தாலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது.
எங்களது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தடம் புரண்டு போயுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை சரி செய்து சீராக்குவோம். சரியான திசைக்கு அதை கொண்டு வருவோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 3 ஆண்டுகளில் இதுவரை 9 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டது. இதைத் தடுக்க திமுக அரசு எதையும் செய்யவில்லை.
காவிரிப் பிரச்சினை, பாலாறுப் பிரச்சினை, முல்லைப் பெரியார் பிரச்சினை என எந்தப் பிரச்சினையையும் தீர்க்க திமுக முயற்சிக்கவில்லை.
மணல் கடத்தல் தாராளமாக நடக்கிறது. கிரானைட் கடத்தல் அபரிமிதமாக உள்ளது. இதன் மூலம் அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தத் தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்கான தேர்தலும் கூட.
ஸ்ரீரங்கம் எனது சொந்த ஊர். இங்குதான் எனது மூதாதையர்கள் வசித்தனர். எனவே நானும் இந்த ஊரைச் சேர்ந்தவள்தான். நான் உங்களில் ஒருத்தி. இங்கு வருவது எனது பிறந்த வீட்டுக்கு வருவது போல உள்ளது. இனிமேல் நான் உங்களுடனேயே இருப்பேன்.
அதி்முக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications