மனு நிராகரிப்பு: சுயேட்சை வேட்பாளர் தற்கொலை முயற்சி
திருப்பூர்: வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த திருப்பூர் தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் அகமது முஸ்தபா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இன்று மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
திருப்பூர் வி.ஓ.சி. நகரைச் சேர்ந்தவர் அகமது முஸ்தபா (32). அவர் வரும் தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியி்ல் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு இன்று நிராகரிக்கப்பட்டது.
அவர் புதிய வங்கி கணக்கு துவங்கியதற்கான ஆதாரத்தை இணைக்காததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரி குறிப்பிட்டிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் மாநகராட்சி அலுவலக மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.