கருணாநிதியின் முதல் கையெழுத்து-திருமாவளவன் கோரிக்கை
கடலூர்: கருணாநிதி மீண்டும் முதல்வராவார். அப்போது அவரது முதல் கையெழுத்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளன் கோரியுள்ளார்.
திட்டக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர், கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார். ஏற்கெனவே நாங்கள் அறிவித்தபடி, திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். கூட்டணி ஆட்சிக்கு வற்புறுத்தமாட்டோம்.
பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து பூரண மதுவிலக்குக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரே வீட்டில், பல குடும்பங்கள் வசிக்கும் அவல நிலை இருந்து வருகிறது. இந்த நிலையைப் போக்க அனைவருக்கும் வீட்டுமனை, அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் வழங்க வரும் 5 ஆண்டுகளில் முதல்வர் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
தேர்தலில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய, திட்டங்கள், சாதனைகள் எதுவும் இல்லாததால் கருணாநிதியின் குடும்பத்தினர் மீது வசைமாரி பொழிந்தார். அவரது தனி நபர் விமர்சனம், மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது. அவரது இந்த அணுகுமுறை மக்களிடம் கருணாநிதி மீது அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையிலான உறவு தேர்தலுக்காக மட்டுமன்றி மேலும் தொடர்ந்து வலுப்படும். எதிர்பார்த்ததைவிட இரு கட்சித் தொண்டர்களும் தேர்தலில் இணக்கமாகச் செயல்பட்டனர்.
அதிமுகவினர் வன்முறையை தூண்டிவிட்டு தேர்தலை நிறுத்த சதி செய்தனர். ஆனால் அது முடியவில்லை என்றார் திருமாவளவன்.
விருதுகள் வழங்கும் விழா தள்ளிவைப்பு:
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாள் ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் விழா எடுப்பது வழக்கம். அது சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரைத் திருவிழா என்னும் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக அதே நாளில் சமூகத் தொண்டு செய்யும் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவையும் இணைத்து நடத்தி வருகிறோம். அம்பேத்கார் சுடர், யோத்திதாசர் ஆதவன், பெரியார் ஒளி, காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகளும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பண முடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இவ்விழா சட்டப் பேரவைத் தேர்தல் குறுக்கிட்டுள்ள நிலையில், நாள் குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது. விருதுகள் வழங்கும் விழா எப்போது நடைபெறும் என்பதும், விருது பெறுவோர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாள் வழக்கம்போல மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி ஆங்காங்கே அமைதியான முறையில் விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அமைதியான தேர்தல்- ராமதாஸ் மகிழ்ச்சி:
இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அமைதியான முறையில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றதற்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம், புதுவையில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு வசதியாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக, புதுவை மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோல் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.