+2 தேர்வு முடிவு தேதி-கல்வித்துறை செயலாளர் மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி முடிவடைந்து தற்போது மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 முடிவுகள் மே மாதம் 2 வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கல்வித்துறை செயலாளர் சபீதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 14 ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார்.
ஆனால் இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிளஸ் 2 தேர்வுகள் முடிந்ததும், மார்க்குகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும், கல்வித்துறை அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே பிளஸ் தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் வெளியிடுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை எந்தவித ஆலோசனையும் நடைபெறாமல் கல்வித்துறை செயலாளர் சபீதா தன்னிச்சையாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்றார்.
விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவுவதாக ஏற்கனவே பேச்சு உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வரும் பல்வேறு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி அதிகாரிகள் சிலர் தன்னிச்சையாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.