அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் ஆட்சி: மீண்டும் முதல்வராகும் கோகாய்
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் காங்கிரஸ் கட்தி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்கட்சியான அசாம் கன பரிஷத் 28 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 35 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அசாமில் 112 இடங்களில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால் ஆறுதலான விஷயம் என்னவென்றால் முதன்முறையாக திரிணாமூல் காங்கிரஸ் அசாமில் ஒரு தொகுதியில் வெற்றி கண்டுள்ளது.
திரிணாமூல் வேட்பாளர் த்விபன் பதக் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமைச்சர் கிரிப் சாலிஹாவை 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
முதல்வர் தருண் கோகாய் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
முதல்வர் தருண் கோகாய் கூறியதாவது,
அசாமில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றமே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காரணம். எங்கள் அமைச்சரவையில் உள்ள எந்த அமைச்சர் மீதும் எந்தவித ஊழல் புகாரும் இல்லை. இதுவும் வெற்றிக்கு காரணம். இந்த தருணத்தில் நான் எங்களுக்கு பெருந்துணையாக இருக்கும் சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். எனினும் எங்களுக்கு இக்கட்டான நிலைகளில் உதவிய பிபிஎப் எப்பொழுதும் எங்கள் அரசில் இருக்கும் என்றார்.