மின் வாரியத்துக்கு ரூ.2,071 கோடி மானியம்: ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2011-12ம் நிதியாண்டிற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (மின்வாரியத்திற்கு) அரசால் வழங்கப்பட வேண்டிய மானியம் ரூ.2071.41 கோடி என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண வீதத்தை விட குறைவான வீதத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்யுமானால், 2003-ம் ஆண்டு மின்சார சட்டத்தின்படி அரசு மின் உற்பத்தி கழகத்திற்கு மானியம் வழங்க வேண்டும்.
வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு மின்கட்டண வீதத்தில் ஒரு யூனிட்டிற்கு 3 காசுகள் முதல் ரூ.1.70 வரை உதவித் தொகை அளித்துவரப்பட்டுள்ளது. குடிசைவாசிகள் மற்றும் விவசாயிகளுக்கு முழு மானியம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்த மானியத் தொகையில் 79 சதவீதமான ரூ.1827.13 கோடி வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கும், 14 சதவீதமான ரூ.290.40 கோடி விவசாயிகளுக்கும், 7 சதவீதமான ரூ.153.88 கோடி குடிசைகள், கைத்தறி, விசைத்தறி, தெருவிளக்கு, வழிபாட்டிடங்கள், பொது குடிநீர் வழங்கல் போன்றவைகளின் மின்சார உபயோகத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய மின்சட்டம் மானியத்தை முன்னதாக வழங்குமாறு மாநில அரசை வலியுறுத்துகிறது. அவ்வாறு வழங்க தவறுமானால், மாநில ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணம் பொருந்தக்கூடியதாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.