'திமுக கூட்டணி குழப்பத்தில் தூண்டில் போட உதவிய வீரமணி'-இந்து முன்னணி
சென்னை: தோற்றுப்போன ஈ.வெ.ராவின் கொள்கையைக் கொல்லைப் புற வழியாகக் கொண்டு வரும் செயல் தான் சமச்சீர் கல்வித் திட்டம் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோதே இந்து முன்னணி கடுமையாக எதிர்த்தது.
தோற்றுப்போன ஈ.வெ.ராவின் கொள்கையைக் கொல்லைப் புற வழியாகக் கொண்டு வரும் செயல் இது என்பதைத் தோலுரித்துக்காட்டி தனது எதிர்ப்பை அறிக்கை மூலம் வெளியிட்டது.
தொடர்ந்து கல்வித்துறையில் கருணாநிதி தனது துதிபாடிகளைக் கொண்டு தனது புகழைப் பாட சமச்சீர் பாடத்திட்டத்தை பயன்படுத்தினார் என்பது வெட்டவெளிச்சமான உண்மை.
இத்தகைய சமுதாய விரோத போக்கிற்குத் தி.க. தலைவர் கி.வீரமணியைப் பயன்படுத்திக் கொண்டார். தேர்தல் வரை எதிர்க்கட்சியை வசைபாடவும், தனது கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் தூண்டில் போடவும் வீரமணி அறிக்கையை கருணாநிதி பயன்படுத்திக் கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை முதல்வர் ஜெயலலிதா அவர்களும் மறந்திக்க மாட்டார்கள் என்று இந்து முன்னணி கருதுகிறது. சமச்சீர் கல்வியில் உள்ள இதுபோன்ற இடைச்செருகல்களை நீக்கி, தேசிய தெய்வீக கருத்துகளும், உண்மையான தமிழ் இலக்கியம், வரலாறு, அறிவியல் பாடங்களையும் மாணவர்கள் பயில புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
தலை சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு, புதிய சமச்சீர் கல்வித் திட்டம் நன்முறையில் அமைக்கப்படவும், தமிழக மாணவர்கள் இந்தியாவில் முதல் தரக்கல்வியைப் பெற்று தலைநிமிர்ந்து வாழவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நடவடிக்கை எடுத்திட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
பாமக எதிர்ப்பு:
இந் நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாமக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவர் அன்புமணி ஆகியோர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், அடிதடி, சண்டை சச்சரவுகள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு குடிப்பழக்கம்தான் அடிப்படை காரணமாகும். மனித சமுதாயத்தை சீரழித்து வரும் குடிப்பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க பூரண மதுவிலக்கு கொள்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தனி மனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கல்விதான் அடிப்படையாகும். ஏழை, பணக்காரர், நடுத்தர வகுப்பினர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான உயர் கல்வி கிடைக்க வேண்டும். இதற்காகவே சமச்சீர் கல்வி முறை வேண்டும் என பாமக முதன் முதலில் குரல் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதனை வலியுறுத்தியதால் கடந்த ஆண்டில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நீக்கி நடைமுறைப்படுத்துவதுதான் சரியானது. ரூ. 200 கோடி செலவில் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மணி கூறி்யுள்ளார்.












Click it and Unblock the Notifications