புகையிலை எதிர்ப்பு நாளான மே 31ம் தேதி சிகரெட், குத்கா விற்காதீர்-வணிகர் சங்கம்
மதுரை: உலக புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ம் தேதி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வணிகர் சங்க பேரவை திட்டமிட்டிடுள்ளது என்று அதன் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இது தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ம் தேதியை புகையிலை எதிர்ப்பு நாளாக உலகம் முழுவதும் கடை பிடித்து வருகின்றது.
தமிழ்நாட்டில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இந்த நாளில், புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
கடந்த சில ஆண்டுகளாக எங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இதற்கு ஆதரவு அளித்து வருகின்றது.
இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ம் தேதி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த பேரவை திட்டமிட்டிடுள்ளது.
புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு மட்டுமின்றி அதன் புகை மற்றும் நெடி அருகாமையில் இருப்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மேலும், குழந்தைகளையும், பெண்களையும் வெகுவாக பாதிக்கின்றது.
குறிப்பாக பெட்டிக் கடைக்காரர்கள் தான் அதிக அளவில் பான்பராக், குட்கா நெடியும் மற்றும் புகைப்பவர்கள் விடும் புகை சூழ்ந்த நிலையில் இருப்பதால் அவர்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதில், அதிக லாபம் இல்லை எனினும் வேறு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவே புகையிலை பொருட்களை விற்க வேண்டியதாகிறது என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு வணிகர்களை கேட்டு கொள்கிறேன்.
புகையிலை பொருட்களின் தயாரிப்பால் அரசாங்கத்துக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரு 7 ஆயிரம் கோடி. புகையிலை நோய்களுக்காக செலவிடப்படுவது ரூ 32 ஆயிரம் கோடி. புகையிலை அரக்கன் தினமும் 2500 பேரின் உயிரை பலி வாங்குகின்றான். எனவே, இது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்.
மே 31ம் தேதி ஒருநாள் மட்டும் தங்கள் கடைகளில் பீடி, சிகரெட், பான்பராக், ஹான்ஸ், குட்கா, சாந்தி பாக்கு போன்றவற்றை விற்பனை செய்யாமல் தவிர்க்குமாறு தமிழகத்தில் உள்ள வணிகர்களை கேட்டுக் கொள்கிறோம்.
அன்று புகையிலையின் தீமைகள் குறித்து முக்கிய நகரங்களில் பேனர்கள் வைக்கப்படும். கடைகளில் இன்று புகையிலைப் பொருட்கள் விற்பனை இல்லை என்கிற அறிவிப்பு மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
மேலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படும். மனித சங்கிலி இயக்கமும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications