அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் நுழைந்த மர்மக் கார்-தாக்குதல் முயற்சி?
விழுப்புரம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்குள் இன்று ஒரு மர்மக் கார் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் வீட்டில் தாக்குதல் நடத்த நடந்த முயற்சியாக இது கருதப்படுகிறது.
காரில் வந்தவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.வி.சண்முகத்தின் வீட்டுக்குள் இன்று காலை ஒரு மர்மக் கார் நுழைந்தது. அதைப் பார்த்த வீட்டின் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் காரைத் தடுத்தனர். ஆனால் காரில் இருந்தவர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கூடுதல் போலீஸார் விரைந்து வந்தனர். காரில் வந்த 3 பேரில் இருவரைப் பிடித்தனர். ஒருவர் தப்பி விட்டார்.
பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் எதற்காக அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தனர், அமைச்சர் வீட்டில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்தார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய நபருக்கும் வலை வீசப்பட்டுள்ளது.
கடந்த 200ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பாமகவினர் சி.வி.சண்முகம் வீட்டில் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டு சண்முகத்தைக் கொல்ல முயன்றனர். அதில் சண்முகத்தின் கார் டிரைவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது சண்முகத்தின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்மக் காரால் பரபரப்பு கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications