மாற்றுத் திறனாளிகள் திருமணம்: தாலிக்குத் தங்கம்-நிதியுதவி: ஜெ அறிவிப்பு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக 4 கிராம் தங்கமும், ரூ.25,000 ரொக்கமும் வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன், ரூ.50,000 ரொக்கம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின் திருமணத்துக்கு உதவிடும் வகையிலும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் விரிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, கை அல்லது கால் இழந்தோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, மாற்றுத் திறனாளிகளை மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகள் அளிக்கப்படுகின்றன.
சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்குத் தங்கம் மற்றும் ரொக்கம் வழங்கும் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் அளித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரூ.25,000 நிதி உதவியுடன், பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக அளிக்கப்படும். இளநிலைப் பட்டம், டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை ரூ.25,000த்தில் இருந்து ரூ.50,000 ஆக அளிக்கப்படும்.
மேலும், 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1 கோடி கூடுதலாக செலவு ஏற்படும்.
மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு தொகை அதிகரிப்பு:
மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சிக் குன்றியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தசைப்பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மாத பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 76,407 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications