புதுவை சட்டசபை சபாநாயகராக சபாபதி பொறுப்பேற்றார்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக சபாபதி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த சபாபதி போட்டியிட்டார். இவரைத் தவிர வேறு யாரும் போட்டியிட மனு செய்யாததால், சபாபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று அவர் சபாநாயராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவரை முதல்வர் ரங்கசாமி அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார். வழக்கமாக எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்துதான் சபாநாயகரை இருக்கையில் அமர வைப்பார். ஆனால் இன்றைய கூட்டத்தை காங்கிரஸ், அதிமுக, திமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டன. இதனால் வேறு வழியில்லாமல் ரங்கசாமி மட்டும் சபாபதியை அழைத்துச் சென்று அமர வைத்தார்.
சபாபதி அரியாங்குப்பம் தொகுதியிலிருந்து 6வது முறையாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்றைய கூட்டத்தை காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன. முதலில் ரங்கசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் சபாநாயகர் தேர்தலை நடத்தியது தவறு என்று அவர்கள் கூறியுள்ளனர்.