ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய டாக்டரை விடுவிக்க பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க உதவிய பாகிஸ்தான் மருத்துவர் ஷகீல் அப்ரிதியை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
பாகிஸ்தான் மருத்துவர் ஷகீல் அப்ரிதி ஒசாமா மற்றும் அவரது குடும்பத்தாரின் டிஎன்ஏ-வைப் பெற சிஐஏ அறிவுரைப்படி போலி தடுப்பூசி முகாம் ஒன்றை அப்போத்தாபாத்தில் நடத்தினார். இந்த தகவல் கிடைத்ததும் சிஐஏ-வுக்கு உதவியதற்காக அவரை ஐஎஸ்ஐ கைது செய்தது.
அவரை விடுவிக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது.
ஷகீல் அப்ரிதி மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை காப்பாற்றி அமெரிக்காவுக்கு வரவழைக்க அந்நாட்டு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தி கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்ரிதி ஒசாமா கொல்லப்பட்டவுடன் கைது செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டு உளவு அமைப்புக்கு துணை போனதால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் சட்டப்படி அவருக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
சிஐஏ அதிகாரிகள் அப்போத்தாபாத் வீட்டில் இருப்பது பின் லேடனும், அவரது குடும்பத்தினரும் தானா என்பதை உறுதிபடுத்த விரும்பியது. எனவே, அவர்கள் டிஎன்ஏவை பெற்று தங்களிடம் உள்ள பின்லேடன் சகோதரியின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பியது.
அதற்காகத் தான் ஷகீல் போலி தடுப்பூசி முகாமை நடத்தினார். பின்லேடன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போட்டுவிட்டு அந்த ஊசியில் சிறிது ரத்தத்தை எடுத்து வர திட்டமிட்டனர். ஆனால் ஷகீல் ஒசாமா வீட்டிற்குள் நுழைந்தும் அவர்களைப் பார்க்க முடியவில்லை.