மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்?

கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது.
நேற்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள்.
2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா.
சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.
அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications