நில அபகரிப்பு வழக்கு: ஆளுநர் பர்னாலாவிடம் திமுக புகார்
நில அபகரிப்பு, நில மோசடி, வீடு அபகரிப்பு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற வழக்குகளில் ஏராளமான திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். பழிவாங்கும் நோக்குடன் அதிமுக அரசு திமுகவினர் மீது பொய்யான வழ்ககுகளை ஜோடிப்பதாக திமுகவினர் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, பெ.கல்யாணசுந்தரம் மற்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பகல் 12 மணிக்கு ராஜ் பவன் சென்றனர். அங்கு தமிழக ஆளுநர் பர்னாலாவை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வந்த டி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிமுக அரசு பாரபட்சமாக நடக்கிறது என்று ஆளுநரிடம் குற்றம்சாட்டியுள்ளோம். வேண்டும் என்றே திமுகவினரை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2006-ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடந்துள்ள சம்பவங்கள் மட்டும் தான் விசாரிக்கப்படுகிறது. ஆனால் 2001ம் ஆண்டில் இருந்து நடந்த நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதில்லை. இது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.