இந்தியன் வங்கி மூலம் மாணவர்களுக்கு ரூ.210.5 கோடி கல்விக் கடன்!

இந்தியன் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர்கள் ராஜீவ் ரிஷி, ராம் கோபால் உள்பட வங்கி அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஜுன் மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைந்த காலாண்டுக்கான முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் நிருபர்களிடம் பேசுகையில், "இந்தியன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.406.9 கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வர்த்தகம் 21.3 சதவீதம் வளர்ச்சியடைந்து 1,92,934.4 கோடியாக உள்ளது.
வங்கியின் டெபாசிட்டுகள் 21.4 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1,10,425 கோடியை எட்டியது. இந்த காலாண்டில் ரூ.100 கோடி கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. விவசாய கடன்கள் 11.6 சதவீதம் அதிகரித்து ரூ.11,638 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 2.19 லட்சம் விவசாயிகள் பயனடையும் வண்ணம் ரூ.1054 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 4040 கிராமங்களில் மாடல் வங்கி சேவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. காலாண்டில் 17,422 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.414.8 கோடி நுண் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஜுன் 30-ந் தேதி கணக்குப்படி, 1,89,596 மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 38,103 மாணவர்களுக்கு ரூ.210.5 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் புதிதாக 51 ஏ.டி.எம். மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன", என்றார்.












Click it and Unblock the Notifications