சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்திற்கு மலிவு விலையில் 630 மெகாவாட் மின்சாரம்-ஒப்பந்தம் கையெழுத்து
தமிழகத்தை மிகை மின் மாநிலமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 768 மில்லியன் டன் எடை கொண்ட நிலக்கரி சுரங்கம் உள்ளது. அங்கிருக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தி தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மின்சாரம் தயாரித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி தமிழகத்திற்கு 592 மில்லியன் டன் நிலக்கரியும், மகாராஷ்டிராவுக்கு 176 மில்லியன் டன்னும் கிடைக்கும். அந்த சுரங்கத்தை மேம்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம் சார்பிலும், மகாராஷ்டிர மாநில சுரங்க கழகம் சார்பிலும் மகா-தமிழ் கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரிலேயே அனல்மின் நிலையம் அமைக்க முடிவு செய்து மகா-தமிழ் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது. அதில் லான்கோ இன்ப்ராடெக் லிமிடெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் கடிதத்தை லான்கோ நிறுவனத் துணைத் தலைவர் பாஸ்கர் ராவிடம் முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசியதாவது,
இந்த முயற்சியால் தமிழகத்திற்கு யூனிட் ரூ. 1.99 வீதம் 630 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மகாராஷ்டிராவுக்கு 23 சதவீதம் நிலக்கரி கிடைக்கும். நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள சத்தீஸ்கருக்கு 740 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழகத்தில் மின்சார நிறுவு திறன் அளவை அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதுள்ள 10 ஆயிரத்து 237 மெகாவாட் அளவில் இருந்து 23 ஆயிரத்து 140 மெகாவாட்டாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, அனல்மின் நிலையத்தின் மூலம் 15 ஆயிரத்து 140 மெகா வாட் மின்சாரமும், காற்றாலைகள் மூலம் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும், சூரிய ஒளிசக்தி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் 23 ஆயிரத்து 140 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய ஒளி சக்தி போன்ற பல்வேறு வழிகளில் மின்சாரம் தாயரிக்க தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் முன்வர வேண்டும். ஆலைகளை துரிதமாக அமைக்கத் தேவையான சூழ்நிலைகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்றார்.