உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர்
குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தபோது குமாரசாமி முதல்வராகவும், எதியூரப்பா துணை முதல்வராகவும் செயல்பட்டனர். அந்த அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் கட்டா சுப்ரமணியம் நாயுடு.
எம்.ஜி.ஆர். தொப்பியை அணிந்து வலம் வரும் கட்டா வித்தியாசமான அரசியல்வாதி. தற்போது அவரும், அவரது மகன் கட்டா ஜெகதீஷும், நில மோசடி விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமையன்று இரவு தனது மகன் ஜெகதீஷை, சரமாரியாக போட்டு அடித்து உதைத்தாராம் கட்டா என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்டா ஜெகதீஷ் பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர். தந்தையுடன் சேர்ந்து அவரும் கைதாகி பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக தொழிற் பகுதி வளர்ச்சி வாரிய நிலத்தை முறைகேடாக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு ஒதுக்கியதாக எழுந்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில்தான் இருவரும் கைதாகியுள்ளனர்.
சிறையின் ஏ பிளாக்கில் ஒரே அறையில் கட்டாவும், அவரது மகனும் அடைக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை இரவு கைதாகி உள்ளே வந்த விரக்தியில் கட்டா சுப்ரமணியம் நாயுடு பெரும் கவலையுடனும், பதட்டத்துடனும் இருந்துள்ளார்.
புலம்பியபடி இருந்த அவர், மகனைப் பார்த்து உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்து தவறு செய்து விட்டேன். இப்போது என்னை சிறைக்குக் கொண்டு வந்து விட்டாய். இத்தனை நாட்களாக சேர்த்து வைத்த நல்ல பெயரையெல்லாம் உன்னால் இழந்து நிற்கிறேன். இனி எப்படி நான் அரசியலில் ஈடுபட முடியும்.
அரசியலில் நல்ல நிலைக்கு வர நான் எப்படியெல்லாம் சிரமப்பட்டேன், போராடினேன். அத்தனையும் உன்னால் அழிந்து போய் விட்டது என்று கோபமாக கூறியபடி மகனை கன்னத்தில் அறைந்தார். பின்னர் சரமாரியாக அவரை அடித்துள்ளார்.
சிறைக் காவலர்கள் உள்ளே புகுந்து கட்டாவை அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறினார்களாம்.