கேரளா செல்லும் தமிழக மீன்களுக்கு அரசு விலை நிர்ணயிக்க கோரி மீனவர்கள் ஸ்டிரைக்
ராமநாதபுரம்: தமிழகத்தில் இருந்து கேரளா கொண்டு செல்லப்படும் மீன்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யக் கோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் ஆகியவை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கொண்டு வரும் மீன்களுக்கு ஏற்றுமதி கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்து உரிய விலை வழங்குவதில்லை. இதனால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பும், விசைப்படகு உரிமையாளர்களுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது என்றும் மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்நிலையில் கேரள கடல் பகுதியில் கடந்த ஒன்றரை மாதம் மீன்பிடி தடை அமலில் இருந்ததால் அவர்கள் தமிழகம் வந்து மீன்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். தற்போது, மீன்பிடி தடைக்காலம் நீங்கியதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கேரளாவில் தமிழக மீன்களுக்கான விலையில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால், தமிழக கடல் பகுதிகளிலிருந்து கேரளா கொண்டு செல்லப்படும் மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்க கோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.