கொச்சி விமான நிலைய ரன்வேயில் சறுக்கிய பஹ்ரைன் விமானம்: 7 பயணிகள் காயம்
கொச்சி: பஹ்ரைனில் இருந்து கொச்சி வந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதில் 7 பயணிகள் காயம் அடைந்தனர்.
ஏர்பஸ் 320 கல்ப் ஏர் விமானம் 137 பயணிகளை ஏற்றிக் கொண்டு பஹ்ரைனில் இருந்து கொச்சி வந்தது. இன்று அதிகாலை 3.55 மணிக்கு தரையிறங்குகையில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. இதனால் பீதியடைந்த பயணிகள் சிலர் அவசர காலத்தில் வெளியேறுவதற்காக இருந்த வழி மூலமாக வெளியே குதித்தனர். இந்த சம்பவத்தில் விமானத்தின் இறக்கைகளும் முறிந்தன. கன மழையும், காற்றும் தான் இந்த விபத்திற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ஓடுபாதை மூடப்பட்டது என்று விமான நிலையத் தலைவர் ஏசிகே நாயர் தெரிவித்தார். இந்த விபத்தில் 7 பயணிகள் காயம் அடைந்தனர். ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்றவர்கள் முதலுதவிக்கு பிறகு வீடு திரும்பினர்.
ஓடுபாதை தயாராக இன்னும் 10 மணி நேரம் ஆகும். இதனால் 9 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications