ஜப்பானில் கடலுக்கடியில் கடும் நிலநடுக்கம்-சுனாமி இல்லை
டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவுக்கு கிழக்கே 210 கி.மீ. தொலைவில் பசிபிக் கடலின் இபராகி கடல் பகுதியில் கடலுக்கடியில் 9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் டோக்கியோ உள்ளிட்ட ஜப்பானின் பல பகுதிகளில் கட்டடங்கள் அதிர்ந்தன.
இந்த நிலநடுக்கத்தால் கடலில் சிறிய அளவில் மாற்றங்கள் தென்படலாம் என்றாலும் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என ஜப்பான் நிலவியல் ஆராய்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது.
ஜப்பானின் வடகிழக்கு கடல் பகுதியில் கடந்த மார்ச் 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏறக்குறையை 20,000 பேர் உயிரிழந்தனர். இதே பகுதியில் தான் இன்றும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பான் அணு உலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கதிர்வீச்சு அபாயம் காரணமாக 1,00,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர் என்பதும் நினைவுகூறத்தக்கது.
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது:
இந் நிலையில் இன்று காலையும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது. இன்று காலை முதலே கன்னியாகுமரி பகுதியில் வானம் மப்பும், மந்தரமும்மாக காணப்பட்டது. கடல அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. 10 அடி முதல் 15 அடி உயரம் வரை ராட்சத அலைகள் சீறி எழும்பின.
கடல் உள்வாங்கியதை அடுத்து இன்று காலை 8 மணிக்கு கடலில் நடுவி்ல் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 9 மணிக்கு பிறகு கடல் பழைய நிலைக்கு திரும்பியது. இதையடுத்து படகு போக்குவரத்து ஆரம்பமானது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் ஒருவித பயத்துடனேயே படகில் பயணித்தனர்.
2004ம் ஆண்டு இந்தியாவை சுனாமி தாக்கிய பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி கடல் உள்வாங்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications