திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: 'தேர்தல் மன்னன்' உள்பட 2 பேர் மனுத் தாக்கல்
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிட லோக் சத்தா கட்சி வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தத் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதிமுக சார்பில் திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வீழ்த்தியவர் மரியம் பிச்சை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ. பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கிளம்பியபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கே.பத்மராஜன் என்பவர் மனுத் தாக்கல் சுயேச்சையாகப் போட்டியிட செய்துள்ளார். இவர் தேர்தல்களில் சுயேச்சையாகப் போட்டியிடுவது இது 124 முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவருக்கு தேர்தல் மன்னன் என்ற பட்டப்பெயரும் உண்டு.
26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 29ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அக்டோபர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி போட்டியிடுகிறார். அதேசமயம், முக்கியக் கட்சியான திமுக இத்தேர்தலில் போட்டியிடுமா, இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டசபை இடைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications