சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவை வீடியோவில் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பூங்குன்றன் ஒரு பொது நலன் மனுவை உயர்நீதி்மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ளாட்சி்த தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மத்திய பாதுகாப்புப் படையினரை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதேபோல சென்னை மாநகராட்சி்த தேர்தலில் போட்டியிடும் 200 திமுக வேட்பாளர்களும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், சென்னை மாநகராட்சிக்கு நடைபெறும் வாக்குப் பதிவை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் ஏற்பாடுகளை நேர்மையாக, நியாயமாக செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதன்மை பெஞ்ச் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். அதன்படிதேர்தல் ஆணையம் தனது பதிலை தாக்கல் செய்தது.
இதை விசாரித்த நீதிமன்றம் இன்று தனது உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பதட்டமான வாக்குச் சாவடிகள் எவை என்பதை நாளைக்குள் அடையாளம் கண்டு அங்கு வெளி மாநில போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில போலீஸாரை இதில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தத் தேவையான நடவடிக்கைகளை ஆணையம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.