சென்னை டூ பெங்களூர்.. 73 நிமிடத்தில் போகலாம்.. விரைவில் புல்லட் ரயில்.. மத்திய அரசு புதிய அப்டேட்
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 73 நிமிடங்களில் செல்லும் வகையில் புதிய புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற ஏஐ தரவு மைய அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை கூறினார்.
அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறியதாவது:- ரயில்வே பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு மட்டும் ரூ.10,134 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதற்கு முன்பாக ஆந்திராவுக்கு 886 கோடி அளவில்தான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று ஆந்திரா இதுவரை இல்லாத அளவிற்கு ரயில்வே மேம்பாட்டு திட்டங்களை கண்டு வருகிறது.

அமராவதி - சென்னை புல்லட் ரயில்
ஆந்திராவில் 74 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. ஆந்திராவில் 16 வந்தே பாரத் ரயில்களும், 22 அம்ரித் பாரத் ரயில்களும் இயங்குகின்றன. முக்கிய ரயில்வே மையமாக ஆந்திரா உருவெடுத்து வருகிறது. அதிவேக ரயில் சேவை என்பது விரைவில் ஆந்திராவில் நிஜமாக போகிறது. புல்லட் ரயில் மூலம் அமராவதி டூ ஐதராபாத் பயணம் நெரம் வெறும் 70 நிமிடங்களாக குறைக்கப்படும்.
அமராவதி முதல் சென்னை புல்லட் ரயில் 112 நிமிடங்களில் பயண தூரத்தை அடையும். ஐதராபாத் - புனே 1 மணி நேரம் 55 நிமிடங்கள், புனே - மும்பை 48 நிமிடங்கள், சென்னை - பெங்களூர் 73 நிமிடங்கள் என பயணம் நேரம் இருக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும். கொல்கத்தா முதல் சென்னை இடையே இருக்கும் கிழக்கு கடற்கரை ரயில் பாதை நான்கு வழி பாதையாக மேம்படுத்தப்படும். தற்போது இருவழித்தடமாக உள்ளது. 500 புதிய ரயில் சேவைகள் மூலம் சரக்கு போக்குவரத்து, பயணிகள் வசதி மேம்படும்" என்றார்.
முதல் புல்லட் ரயில் திட்டம்
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜப்பான் தொழில் நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் 2027 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முழு வீச்சில் இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 508 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 2 மணி நேரம் 7 நிமிடங்களில் இந்த புல்லட் ரயில் எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூர் புல்லட் ரயில்
நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக சென்னை - பெங்களூர் உள்ளன. இரு நகரங்களுக்கும் இடையே தினமும் ரயில், விமானம், சாலை மார்க்கமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். மருத்துவம், தொழில், பணி என பல்வேறு காரணங்களுக்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் சென்று வரும் நிலையில் சென்னை - பெங்களூர் பயண நேரம் தற்போது ரயிலில் (வந்தே பாரத்) சென்றால் 4 மணி நேரம் 10 நிமிடங்களில் செல்ல முடியும்.
இதுவே புல்லட் ரயில் என்றால் வெறும் 70 நிமிடங்களாக குறையும் என்பதால் பயணிகள் இடையே இந்த ரயில் திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. எனினும், இந்த புல்லட் ரயில் திட்டம் எப்போது கொண்டு வரப்படும் என்ற காலக்கெடு எதுவும் கூறப்படவில்லை.












Click it and Unblock the Notifications