அண்ணா அறிவாலயத்தை தனது குடும்பச் சொத்தாக்கி விட்டார் கருணாநிதி-ஜெ. தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா அறிவாலயம் தொடர்பாக மாற்றி மாற்றி பேசி வருகிறார் கருணாநிதி. அண்ணா அறிவாலயத்தை இன்று கருணாநிதியின் குடும்பச் சொத்தாக்கி விட்டனர் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னையில் நேற்று நடந்த இறுதிக் கட்டப் பிரசாரத்தின்போது மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது அவர் பேசுகையில்,

அண்ணா அறிவாலயம் மிரட்டி வாங்கப்பட்டது குறித்து திருச்சியில் நான் எடுத்துக்கூறினேன். இதற்கு பதில் அளித்த கருணாநிதி, அண்ணா அறிவாலயம் 1972-ம் ஆண்டு வாங்கப்பட்டது. அந்த மனை ஏறத்தாழ 25 கிரவுண்டு இடம்...'' என்று கூறினார். அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் 25 கிரவுண்டு அல்ல; 90 கிரவுண்டு என்று தூத்துக்குடியில் நான் எடுத்துக் கூறினேன். இதற்கு பதில் அளித்த கருணாநிதி, ஒரு காணி என்பதற்கு ஏறத்தாழ 25 கிரவுண்டு என்று சொன்னேனே தவிர, முழு இடமுமே 25 கிரவுண்டு என்ற பொருளில் பேசவில்லை'' என்று கூறி இருக்கிறார். இதிலிருந்து, மாறி, மாறி பேசுவதில் வல்லவர் என்பதை கருணாநிதி நிரூபித்து இருக்கிறார். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக, தி.மு.க. அறக்கட்டளை பத்திரத்தில் எம்.ஜி.ஆர். பெயரும் இடம்பெற்றுள்ளது. அதை பத்திரத்தில் காணலாம்'' என்று கூறி இருக்கிறார் கருணாநிதி. அறக்கட்டளை பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் இல்லை என்று நான் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டதெல்லாம் அண்ணா அறிவாலயம் இடம் வாங்கியதற்கான பத்திரத்தில், எம்.ஜி.ஆரின் பெயர் இல்லை என்று தான். மொத்தத்தில், உண்மையை மூடி மறைக்கப்பார்க்கிறார் கருணாநிதி. தற்போது, அண்ணா அறிவாலயம் கருணாநிதியின் குடும்ப சொத்தாகி விட்டது. இப்படிப்பட்ட சுயநலவாதி கருணாநிதிக்கு நீங்கள் இந்த தேர்தலில் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த மாநகராட்சித் தேர்தலின்போது, தி.மு.க.வினர் நடத்திய வன்முறைகளை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். மக்களை வாக்களிக்க விடாமல், அனைத்து வாக்குகளையும் தி.மு.க.வினரே பதிவு செய்தனர். இதன் மூலம் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் தி.மு.க.விடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. திமுக மாநகராட்சி உறுப்பினர்கள் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இந்த ஐந்து ஆண்டுகளில் மாநகராட்சியும் வளரவில்லை மக்களும் பயனடையவில்லை. 'சிங்காரச் சென்னை' என்று சொல்லியே சென்னையை சீரழித்து விட்டனர்.

சென்னை மாநகராட்சியில் இப்போதுள்ள அடிப்படைத் தேவைகளான குப்பைகளை அகற்றுதல், மழை நீர் தேங்குவதைத் தடுத்தல், மாநகராட்சி மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துதல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள புதிய பகுதிகளின் தரத்தை உயர்த்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் கை சுத்தமான மாநகராட்சி ஏற்படுத்தப்படும். இதன் அடிப்படையில், சர்வதேச அளவில் பாராட்டப்படும் வகையில் எழில்மிகு சென்னை உருவாக்கப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அதிமுக அரசு, அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. விலையில்லா அரிசி, முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வு ஊதியம் ரூ. 500-லிருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தப்பட்டது, மகளிருக்கான திருமண உதவித் திட்டம், மீனவர் உதவித் தொகை உயர்வு, தாய்மார்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட பொதுமக்களின் சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்படும் என்ற அதிமுக வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மின் உற்பத்தியை பெருக்கவும், மின்வெட்டைப் போக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டுக்குள் மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.

சட்டப் பேரவைத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டிய வரலாற்று சாதனையைப்போல், மீண்டும் ஒரு திருப்பு முனையை மக்கள் உருவாக்க வேண்டும். சென்னை மேயர் வேட்பாளராக போட்டியிடும் சைதை துரைசாமிக்கும், மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளர்களாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இவர்கள் அனைவரும் மக்களுடனேயே இருந்து குறைகளைத் தீர்ப்பவர்களாக இருப்பர். இவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக நிச்சயம் செயல்பட மாட்டார்கள் என உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார் ஜெயலலிதா.

சென்னையில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் செய்த பகுதிகளில் பெருமளவில் அதிமுகவினரும், பொதுமக்களும் திரண்டதால் அந்தப் பகுதிகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயின. மேலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஜெயலலிதாவின் பிரசார வாகனம் செல்லும் நிலை ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+