ராஜீவ் கொலை: 3 பேர் தூக்கு தண்டணையை நிறைவேற்ற வேண்டும்- மத்திய அரசு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு 11 ஆண்டுகளுக்குப் பின் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் தாக்கல் செய்த மனுவில், 11 ஆண்டுகள் காலதாமதமாக கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். ஆயுள் தண்டனை காலத்தையும் தாண்டி சிறையில் இருப்பதால் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தாவிட்டனர்.
மேலும், இவர்களது மனுக்களுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் எல்.கே.வெங்கட் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,3 பேரின் மனுவை விசாரித்தபோது சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் 10,000க்கும் மேற்பட்டோர் நுழைந்து கோஷங்கள் போட்டனர். எனவே இந்த வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்களது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்களுக்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தனது மனுவில், மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்து விட்டார். கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின் தூக்கில் போடுவதுதான் சரியான நடைமுறை.
ஆகவே இவர்களின் தூக்கு தண்டணையை உடனே நிறைவேற்ற வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தில் வெங்கட் தாக்கல் செய்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதுவரை 3 பேரின் தூக்குத் தண்டனைக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications