Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்- மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

Murugan, Santhan and Perarivalan
சென்னை: ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். மத்திய அரசு சார்பில் உள்துறை இணை செயலாளர் சுக் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை, இவர்கள் 3 பேரும் எதிர்க்கவில்லை என்ற காரணம் ஒன்றே இவர்களின் மனுவை நிராகரிக்க போதுமானதாகும். இவர்கள் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சம்பளம் பெற்று வந்த ஊழியர்கள்.

ராஜீவ் காந்தியை கொலை செய்யும் ஒரே நோக்கத்தில் இந்தியாவுக்குள் ஊடுறுவி வந்தவர்கள் இவர்கள். இங்குள்ள ஒரு சிலருடன் சேர்ந்து இந்த படுகொலையை செய்தது, தேசத்துக்கு எதிரான செயல் என்று நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

திரிவேணிபென் Vs குஜராத் வழக்கு:

இவர்களின் கருணை மனு மீதான முடிவை காலம்தாழ்த்தி ஜனாதிபதி எடுத்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலை, பொருளாதார நிலை, சர்வதேச சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சரவை கூறிய பரிந்துரையின் அடிப்படையில்தான் குடியரசுத் தலைவர் முடிவெடுத்தார்.

இந்த காலதாமதத்தால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், கடுமையான பாதிப்பை அடைந்ததாகவும் கூறியுள்ளனர். இதுசம்பந்தமாக திரிவேணிபென் மற்றும் குஜராத் அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்து பொருத்தமானதாக இருக்கும்.

கருணை மனு மீது முடிவெடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்ட சூழ்நிலையை பற்றி மட்டும் ஆராய்வோமே தவிர, ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்குள் நுழைய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதோடு, ஒரு வழக்கின் தன்மை மற்றும் அதற்கான விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில்தான், கருணை மனு மீது முடிவெடுப்பதற்கு காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும் கருத்து கூறியுள்ளது.

மேலும், கருணை மனு மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு உத்தரவு சட்டமாக இருக்கும்போது, இவ்வளவு கொடூரமான குற்றத் தன்மையைக் கொண்ட இந்த வழக்கில், காலதாமதம் ஏற்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது.

பலர் மரணம்

மற்றவர்களின் வாழ்க்கையை முடித்தவர்கள், தங்கள் வாழ்க்கையின் உரிமையை கோருகின்றனர். 16 பேர் மரணம், 43 பேர் காயம் என்ற அளவோடு மட்டும் இந்த சம்பவம் முடிந்துவிடவில்லை. நாடுமுழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரங்களால் பலர் காயமடைந்தனர். 4 நாட்களாக நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தற்போது நன்றாக கல்வி அறிவு பெற்றிருப்பதாகவும், இனிமேல் சமுதாயத்துக்கு உதவிகரமாக இருக்கப்போவதாகவும் மனுதாரர்கள் கூறுவதை சட்டப்பூர்வமாக ஏற்க முடியாது.

தவறான முன்னுதாரணம்

திரிவேனிபென் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 'வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு, அந்த தீர்ப்பை மாற்றுவதற்காக நன்நடத்தையை ஒரு காரணமாக ஏற்க முடியாது' என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் கூறியுள்ள கருத்துகள் அனைத்தையும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

சில பிரமுகர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் நீதிபதிகள் போன்றவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கடிதம் எழுதி தண்டனையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை தண்டனை குறைப்புக்கான காரணமாக எடுத்துக்கொண்டால் அது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும். மதம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் தண்டனை குறைப்புக்கான கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கிவிடுவார்கள். இது ஒரு சமாதானமற்ற நிலையை நாட்டில் ஏற்படுத்திவிடும்.

சுயலாபம் தேடும் அரசியல் கட்சிகள்

இவர்கள் அனைவருமே விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மனுதாரருக்கு ஆதரவு தெரிவிக்கும் சில அரசியல் கட்சிகளில் சில கட்சிகள், மாநிலத்தில் அரசாண்டபோதும், மத்திய அரசுடன் இணைந்திருந்தபோதும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பரிந்துரைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, இந்த மனுதாரர்களின் கருணை மனுவை நிராகரிப்பதற்கும் பரிந்துரைத்தனர்.

இந்த விவகாரத்தை வைத்து சுயலாபம் தேடுவதற்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் முயலுகின்றனர். அவர்களால் இந்த விவகாரத்தில் பூசப்படும் சாயம் எதுவும் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல.

சரியான முடிவுதான்

ஜெயிலில் இருந்தபோது அவர்களின் உரிமை எதையும் பறிக்கவில்லை. அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்படும் சலுகைகள், இவர்களுக்கும் வழங்கப்பட்டது. தங்கள் வழக்கை எதிர்கொள்வதற்கு சட்ட ரீதியான வாய்ப்புகளும் தரப்பட்டன. கல்வி கற்றதாக கூறியுள்ளனர். எனவே காலதாமதத்தால் இவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் என்று கூற முடியாது.

மனுதாரர்கள் கூறும் காரணங்களை வைத்து கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு செய்திருந்தால், அது இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்திருந்த உத்தரவை திருத்துவதுபோல் அமைந்திருக்கும். மற்ற மரண தண்டனை கைதிகளின் கருணை மனுவோடு, இவர்களின் மனுவையும் சீர்தூக்கி பார்த்த பின்பே, சரியான முடிவை ஜனாதிபதி எடுத்தார்.

இன்னொரு குற்றம் நடக்காமல் இருக்க...

இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைதான், இதுபோல் இன்னொரு குற்றம் நடக்காமல் இருக்க உதவும். கருணை மனு மீது காலதாமதமாக எடுத்த முடிவு, எந்த ஒரு குற்றத்தின் தன்மையையும் குறைப்பதற்கு காரணமாக அமையாது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 72-ம் பிரிவில் ஜனாதிபதிக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள், உத்தரவுகளை மீறி அவர் முடிவு செய்யலாம். அப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட அவருக்கு, கருணை மனு மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.

அதனால் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லை. எனவே தண்டனையை குறைப்பதற்கு காலதாமதத்தை ஒரு காரணமாக கூற முடியாது. அனைத்து ஆதாரங்களையும், ஆவணங்களையும் பரிசீலித்து பார்த்த பிறகே குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட யாருமே, அரசியல் சாசனத்தின் 21-ம் பிரிவில் உள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்ட முடியாது. இவர்கள் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டியவர்கள்.

மக்கள் ஆதரவு இருந்தாலும்...

பொதுமக்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதையெல்லாம் இதுபோன்ற கொடூர குற்றங்களை தீர்மானிப்பதற்கான அளவுகோலாக கொள்ளக்கூடாது.

இவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். மனுதாரர்கள் தங்கள் வழக்கை எதிர்கொள்வதற்கு அதிக பணத்தை செலவு செய்கின்றனர். மனுதாரர் முருகனின் மகள் லண்டனில் படிக்கிறார்.

ஆனால் அவர்களால் பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் இன்னும் இருள் விலகாமல் உள்ளன. குடும்பத்தை நடத்தி வந்த பலர் இவர்களால் உயிரிழந்துவிட்டனர்.

காலதாமதம் தரும் வாழும் வாய்ப்பு

இவர்களின் கருணை மனு முன்பே முடிவு செய்யப்பட்டு இருந்தால், முன்பே தூக்கில் தொங்கியிருக்க வேண்டும். கருணை மனு காலதாமதமானதால்தான் அவர்களுக்கு வாழும் உரிமை மற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கருணை மனு ஏற்கப்பட்டிருந்தாலும், ஜெயிலில் அவர்கள் இயற்கையாக மரணம் அடையும் வரை இருந்தாக வேண்டும். குறிப்பிட்ட உத்தரவு வந்தால்தான் நிவாரணம் கிடைக்கும்.

அவர்கள் தாக்கல் செய்த கருணை மனு எவ்வளவு காலம் நிலுவையில் இருக்க வேண்டுமோ, அவ்வளவு காலம் நிலுவையில் இருக்க வேண்டும். அது தள்ளுபடி ஆகிவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம். கருணை மனு நிலுவையில் இருந்ததால்தான், ஜெயிலில் அவர்கள் உயிருடன் இருக்கின்றனர்.

ரத்து செய்யுங்கள்

மரண தண்டனையை ரத்து செய்ய கேட்டு இவர்கள் கூறியுள்ள காரணங்கள் எதையும் ஏற்க முடியாது என்பதால், அபராதம் விதித்து அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+