நண்பரிடம் கடன் வாங்கி ஐடி துறைக்கு ரூ. 9.27 லட்சம் பாக்கியைக் கட்ட கேஜ்ரிவால் திட்டம்
டெல்லி: அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், வருமான வரித்துறைக்குத் தான் கட்ட வேண்டிய ரூ. 9.27 லட்சத்தை செலுத்துவதற்காக நண்பரிடம் கடன் வாங்கப் போகிறாராம்.
வருமான வரித்துறையில் பணியாற்றி வந்தவர் கேஜ்ரிவால். ஆர்.டி.ஐ சேவகராக உருவெடுத்த அவர் பின்னர் அன்னா ஹஸாரே குழுவில் இணைந்து முக்கியப் புள்ளியாக மாறினார்.
சமீபத்தில் வருமான வரித்துறை கேஜ்ரிவாலுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஸ்டடி லீவ் போட்டு விட்டுச் சென்ற கேஜ்ரிவால் அதற்குப் பிறகு பணிக்கு வரவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் வாங்கிய சம்பளத் தொகை ரூ. 3.50 லட்சம், அதற்குரிய வட்டித் தொகை ரூ. 4.16 லட்சம், கம்ப்யூட்டர் லோனாக வாங்கிய ரூ. 50,000 மற்றும் அதற்குரிய வட்டி என மொத்தம் ரூ. 9.27 லட்சத்தை திருப்பித் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதை மறுத்த கேஜ்ரிவால், தான் 2000மாவது ஆண்டு நவம்பர் 1 முதல் 20002, அக்டோபர் 31 வரை ஸட்டி லீவில் போனதாகவும், பின்னர் 2002, நவம்பர் 1ம் தேதி பணியில் சேர்ந்ததாகவும், அதன் பின்னர் 2004 முதல் 2006 வரை சம்பளம் இல்லாத விடுப்பில் போனதாகவும் கூறியிருந்தார். இருப்பினும் இதை வருமான வரித்துறை ஏற்கவில்லை.
அக்டோபர் 20ம் தேதி கேஜ்ரிவாலுக்கு 2வது நோட்டீஸை அனுப்பிய வருமான வரித்துறை, அக்டோபர் 27ம் தேதிக்குள் கேஜ்ரிவால் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் விருப்ப ஓய்வு பெறும் விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார். முதலில் சம்பளப் பணத்தைத் திருப்பித் தருமாறும், அப்படித் தந்தால் விருப்ப ஓய்வு விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை கூறியிருந்தது.
இதையடுத்து ரூ. 9.27 லட்சத்தைத் திருப்பித் தர கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இந்தப் பணத்தை கடன் வாங்கி தரப் போவதாக கேஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வருமானவரித்துறை கூறும் தொகையை திரும்பத் தர நான் முடிவு செய்துள்ளேன். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே எனது நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி செலுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.