தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும்- வானிலை மையம்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது கன்னியாகுமரி அருகே நகர்ந்து உள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத் துடன் காணப்படும். அவ்வப்போது சில பகுதிகளில் மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதவிர அரபிக் கடலில் ஓமன் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலோர கர்நாடகத்தில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஏரிகள் நிரம்புகின்றன
இதற்கிடையே, சென்னை சுற்றுப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
இந்த ஏரியின் மொத்த நீர் அளவு 24 அடியாகும். தற்போது 20.4 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 22 அடியாக நீர் இருப்பு உயர்ந்தவுடன் ஏரி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த ஏரி நவம்பர் முதல் வாரத்தில்தான் நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே அது நிரம்புகிறது.
100 வயதான மரம் விழுந்தது
இதற்கிடையே, திருவொற்றியூர், சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மரம் மழை காரணமாக முறிந்து விழுந்தது. அப்போது அது 2 வீடுகளின் மீது விழுந்ததில் வீடு நொறுங்கிப் போனது. அதிர்ஷ்டவசமாக அந்த வீடுகளில் வசித்து வரும் 10 பேரும் வெளியே போயிருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கொடைக்கானலில் பனிமூட்டத்துடன் சாரல் மழை
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரத்து அடியோடு குறைந்து விட்டது.
இன்று காலை முதல் அங்கு பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருவதால், இன்று நடைபெறும் வாராந்திர சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி வெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசி
அதேபோல நெல்லையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் ஆற்றில் குளித்த அன்சாரி என்பவர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அவர் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மின்சார வயரை மிதித்த 3 பேர் பலி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தையடுத்த மன்னார் கோவிலைச் சேர்ந்தவர் ரத்தினமணி (60). இன்று காலை அப்பகுதியில் நடந்து சென்ற போது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதே போல், கூடங்குளம் அருகே ஆட்டுக்கிடை போட்டிருந்த சுடலைமணி (40) மற்றும் செல்வம் (34) ஆகியோரும் அறுந்து கிடந்த+ மின்வயரை மிதித்து பலியானார்கள்.












Click it and Unblock the Notifications