தொடர் மழை: ரூ.1 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் 4 ஆயிரம் கையினால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஆலைகளும், 250 பகுதி நேர தீப்பெட்டி ஆலைகளும், 25 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியில் தயார் செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிக்கைக்கு பின்னர் தென்மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. ரூ. 1 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வரும் நிலையில் தொடர் மழையின் காரணமாக இத்தொழில் மேலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.