சொத்தை விற்று கட்சிக்காக உழைத்தவன் நான், இதற்கு மேல் என்ன சொல்ல?- வேல்முருகன்
சென்னை: கட்சிக்காக சொத்தையெல்லாம் விற்று உழைத்தவன் நான்.இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை என்று தனது நீக்கம் குறித்து முன்னாள் பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் கூறியுள்ளார்.
பாமகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வேல்முருகனிடம் கருத்து கேட்டபோது அவர் கூறுகையில், எனக்கு 15 வயதாக இருக்கும், வன்னியர் சங்கத்தில் இணைந்து அதன் மூலம் அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவன் நான்.
எனது கடுமையான உழைப்பாலும், கட்சித் தலைமையிடம் நான் விசுவாசமாக இருந்ததாலும் மாநில இணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வரை உயர்ந்தேன். எனது கடுமையான உழைப்பு மட்டுமே எனது உயர்வுக்குக் காரணம்.
பலமுறை கட்சிக்காக பல வழக்குகளை சந்தித்துள்ளேன். எனது சொத்துக்களையெல்லாம் விற்று கட்சிக்காக உழைத்தேன். இதற்கு மேல் நான் எதையும் பேச விரும்பவில்லை.
எனது நிலை குறித்து உரிய முறையில் விளக்கம் கேட்கப்படவில்லை, அதற்கான வாய்ப்பையும் தரவில்லை. எனது நீக்கம் குறித்து எனக்கு இதுவரை தகவல் தரப்படவில்லை என்றார் வேல்முருகன்.
கருணாநிதியின் மனம் கவர்ந்தவர்
வேல்முருகனின் சுறுசுறுப்பும், அவரது கடுமையான உழைப்பும், பாமகவினரை விட திமுக தலைவர் கருணாநிதிக்குத்தான் அதிகம் பிடிக்கும். வேல்முருகனை நேரிலேயே பாராட்டியவர் கருணாநிதி. அவரது செயல்திறன் காரணமாக கருணாநிதியின் பிரியத்துக்குரிய பாமக தலைவர்களில் ஒருவராக வேல்முருகன் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications