பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் ஜெ. மனு- விசாரிக்க நீதிபதி மறுப்பு

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அக்.20 மற்றும் 21-ம் தேதிகளில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கேற்ப பெங்களூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி நீதிபதி எழுப்பிய 567 கேள்விகளுக்கு பதில் அளித்தார் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மீதமுள்ள கேள்விகளுக்காக வருகிற 8ஆம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை அவர் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒருமுறை ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நான் ஆஜர் ஆனேன். மீண்டும் கோர்ட்டில் ஆஜராகுமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு மீண்டும் ஆஜராகுமாறு கேட்பது உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.
கடந்த முறை ஆஜரானபோது 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் உள்ளது. நேரில் ஆஜராகாமல் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க சட்டத்தில் இடமுள்ளது. எனவே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதில் ஒரு நீதிபதியான டி.எஸ்.தாகூர் தான் விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.











Click it and Unblock the Notifications