தேனி மாவட்டத்தில் கனமழை: வைகையில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி: வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திங்கட்கிழமை மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுவதால், அப்போது அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக வெளியேற்றப்படும். இதையடுத்து மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிகிறது.
வைகையில் வெள்ளம் பெருகியுள்ளதை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் செய்துவருகின்றனர். ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.