சிவகங்கையி்ல் தனி தீயணைப்பு துறை கோட்டம் அமைக்க தமிழக அரசு உத்தரவு
சென்னை: மக்களுக்கு அதிக பயனளிக்கும் வகையி்ல், சிவகங்கையில் புதிய தீயணைப்பு கோட்டத்தை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கையில் ஏற்படும் தீவிபத்துகளை உடனடியாக அணைக்கவும், மீட்பு பணிகளை விரைவாக செய்யவும் சிவகங்கையில் புதிய தீயணைப்பு கோட்டத்தை ஏற்படுத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார். இதற்காக ராமநாதபுரம் கோட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநாதபுரம், சிவகங்கை என தனித்தனி கோட்டங்களாக இயங்க உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தீயின் அழிவிலிருந்தும் இயற்கை சீற்றங்களில் இருந்தும் மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளில் இருந்தும் பொதுமக்களின் உயிர், உடைமைகளை பாதுகாக்கும் புனிதமான சேவையை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை செய்து வருகிறது.
தீவிபத்து மற்றும் இயற்கை சீற்றங்களை விரைந்து எதிர்கொள்ளும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. தற்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 11 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் 6 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள், ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்ட கோட்ட அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
இந்தக் கோட்ட அலுவலர் அவரது அதிகார எல்லைக்குள் ஏற்படும் பெரும் தீ விபத்து இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, அத்தகைய நிகழ்வுகள் மீண்டும் ஏற்படா வண்ணம் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வார். இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரே கோட்ட அலுவலகம் அமைந்துள்ளது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் தொய்வை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் ராமநாதபுரம் - சிவகங்கை கோட்டத்தை இரண்டாகப் பிரித்து, சிவகங்கையில் புதிய கோட்டம் ஒன்றை தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இப்புதிய கோட்டத்தின் கீழ் சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புனேரி, மானாமதுரை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் செயல்படும். புதிய கோட்ட அலுவலகத்திற்கு தேவையான அலுவலர்கள், பணியாளர்கள், வாகனங்கள், அறைகலன்கள் ஆகியவற்றுக்கும் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
சிவகங்கையில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி கோட்டம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.34,32,000 தொடர் செலவினமும், ரூ.7,76,000 தொடரா செலவினமும் ஏற்படும், என்று அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications