ப.சிதம்பரம் விவகாரம்: 2ஜி ஆவண நகலை சாமிக்கு தர சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களின் நகல்களை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியிடம் அளிக்குமாறு சிபிஐக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்க வேண்டும் என்று கோரி சாமி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 24ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விலை நிர்ணயம் மற்றும் நுழைவுக் கட்டணம் ஆகிய அம்சங்களில் ப.சிதம்பரத்துக்கும், ஆ.ராசாவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இது தொடர்பான புதிய உண்மைகளை நீதிமன்றம் வெளிக்கொண்டு வர வேண்டும். ப.சிதம்பரமும், ஆ.ராசாவும் சேர்ந்துதான் இவற்றை நிர்ணயித்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் ராஜ்யசபாவில் சிதம்பரம் ஆற்றிய பேச்சில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை வேண்டுமென்றே சிபிஐ அதிகாரிகள் வழக்கில் சேர்க்கவில்லை. எனவே அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பை நிரூபிக்க எனக்கு ஒருங்கிணைந்த அணுகு சேவை லைசென்ஸ் கொள்கை (Unified Access Service Licence policy-UASL) தொடர்பான ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும் என்று சாமி கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய சாமி, லைசென்ஸ் வழங்கப்பட்டபோது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை ஆராய UASL ஆவணங்கள் மிக அவசியம். 2009ம் ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. ஆனால் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையுடன் இணைத்து சிபிஐ அளிக்கவில்லை. எனவே அந்த ஆவண நகல் இருந்தால் அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப.சிதம்பரம் அளித்த ஒப்புதல் மற்றும் அவரது கையெழுத்து இருக்கும். அதை வைத்து வழக்கை மேலும் தொடர வசதியாக இருக்கும் என்றார்.
மேலும் அந்த ஆவணங்களில் தான் ராசா மற்றும் சிதம்பரம் இடையே நடந்த கடித பரிவர்த்தனையும் எழுத்துப்பூர்வமாக உள்ளது என்றார்.
இதை விசாரித்த நீதிபதி ஒ.பி. சைனி, இது தொடர்பான ஆவண நகல்களை சாமிக்கு வழங்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.