அமைச்சர் கல்யாணசுந்தரம் கலாட்டா + மிரட்டல்- கலக்கத்தில் முதல்வர் ரங்கசாமி
கல்யாணசுந்தரம் கலாட்டா பெரும் பரபரப்பான சம்பவமாக மாறி வருகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வை தான் போய் எழுதாமல் ஆள் வைத்து எழுதி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் கல்யாணம். இதையடுத்து தமிழக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால் யார் கண்ணிலும் 'அம்புடாமல்' எஸ்கேப் ஆகி வருகிறார் கல்யாணம்.
சென்னை உயர்நீதி்மன்றத்தில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அவரைக் கைது செய்ய தமிழக போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் கல்யாணசுந்தரம் தலைமறைவாகி விட்டார்.
சமீபத்தில் சென்னையிலிருந்து அவர் காரில் புதுவை வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மரக்காணம் செக்போஸ்ட்டில் போலீஸார் உஷாராக இருந்தனர். ஆனால் தமிழ் சினிமாவில் வில்லன்கள் செய்வது போல வழியிலேயே காரை நிறுத்தி வேறு ஒரு காரில் ஏறித் தப்பி விட்டார் கல்யாணம். இதனால் போலீஸார் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், அவர் தற்போது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் கைதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் அவர் யோசித்து வருவதாக தெரிகிறது. பேசாமல் திண்டிவனம் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்று விடலாமா என்ற யோசனையும் அவரிடம் இருப்பதாக தெரிகிறது.
கல்யாணம் இப்படி ஒரு கலாட்டாவில் ஈடுபட்டுள்ள நிலையில் மறுபக்கம் அவரால் முதல்வர் ரங்கசாமி பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். கல்யாண சுந்தரத்தை பதவியிலிருந்து நீக்கவும் முடியாத நிலையில் அவர் இருக்கிறாராம். காரணம், என்னை பதவியிலிருந்து நீக்கினால் எனது எம்.எல்.ஏ. பதவியை உதறி விடுவேன் என்று கல்யாணசுந்தரம் மிரட்டுவதாக தெரிகிறது. அப்படி அவர் செய்தால் அரசு பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் இழந்து விடும். இதனால் ஆட்சியே கவிழும் அபாயம் உள்ளது.
இதனால் முள்ளில் சிக்கிக் கொண்ட தனது சட்டையை பத்திரமாக எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ரங்கசாமி.