கேரளாவில் சாலை விதிகளை மீறியதற்காக ரூ.1000 அபராதம் கட்டிய ஏ.டி.ஜி.பி
திருவனந்தபுரம்: கேரளாவில் சாலை விதிகளை மீறயதற்காக ஏ.டி.ஜி.பி. வேணுகோபால் கே. நாயர் ரூ.1000 அபராதம் செலுத்தினார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணிக்க முக்கிய இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் மூலம் சாலை விதிகளை மீறுபவர்களை போலீசார் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 26ம் தேதி திருவனந்தபுரம் கவடியார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோது அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் நின்றன. சைரன் உள்ள கே.எல் 01 பிபி 1531 என்ற கார் மட்டும் சிக்னலை மதிக்காமல் சென்றது.
ரகசிய கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த கார் ஏ.டி.ஜி.பி வேணுகோபால் கே. நாயர் பயன்படுத்துவது என்று தெரிய வந்தது. இது குறித்து போக்குவரத்து ஆணையாளர் மூலம் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக ரூ.1000 அபராதம் கட்டுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஏ.டி.ஜி.பி. வேணுகோபால் நாயரின் கார் ஓட்டுநர், திருவனந்தபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அபராத தொகையை செலுத்தினார். நடந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வேணுகோபால் நாயர் தெரிவித்தார்.