ரயிலிலிந்து கேரள பெண் தள்ளிவிடப்பட்டு கொலை-தமிழக நபருக்கு தூக்குத் தண்டனை
திருச்சூர்: கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த பெண்ணை ரயில் பெட்டியில் இருந்து தள்ளி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தமிழக வாலிபருக்கு திருச்சூர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சோரனூர் மஞ்சக்காடு பகுதியை சேர்ந்த சவுமியா என்ற பெண் கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர் செல்லும் பாசஞ்சர் ரெயிலில் பயணம் செய்த போது ரெயில் பெட்டியில் அவர் மட்டும் இருப்பதை அறிந்த ஒரு வாலிபர் ரெயில் புறப்படும் போது அந்த பெட்டியில் ஓடிவந்து ஏறிக்கொண்டார்.
ரெயில் ஓடிக்கொண்டு இருந்த போது அந்த வாலிபர், சவுமியாவை கீழே தள்ளி விட்டார். இதில் சவுமியா படுகாயம் அடைந்த நிலையிலும் அந்த வாலிபரும் கீழே குதித்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் உயிருக்கு போராடிய சவுமியாவை, ரெயில்வே போலீசார் மீட்டு, திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் தீவிர சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6-ம் தேதி சவுமியா மரணமடைந்தார்.
இந்த கொலைக்கு காரணமாக விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலையில் குற்றாவளிக்கு இன்று திருச்சூர் கோர்ட் தீர்ப்பளித்தது.
அதில் கோவிந்தசாமிக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.