மக்கள் நலப் பணியாளர்களுக்காக நடந்த போராட்டத்தி்ல திமுக கோஷ்டி மோதல்- 'கை கலந்ததால்' பரபரப்பு!
நாகர்கோவில்: மக்கள் நலப்பணியாளர்களின் பணி நீக்க உத்தரவை கண்டித்து திமுகவினர் நாகர்கோவிலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டபோது கோஷ்டி மோதல் மூண்டது. இரு கோஷ்டியினர் கை கலந்து போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த மக்களுக்கு 'போனஸ்' வேடிக்கையைக் கொடுத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். திமுக ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் நலப்பணியாளர்கள் செயல்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் நலப்பணியாளர்களின் பணி நீக்கத்தை கண்டித்து அரசுக்கு எதிராக திமுகவினர் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலில் கோஷ்டி மோதல்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர். அப்போது ஆர்பாட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் எம்எல்ஏ ரெஜினால்டு தரப்பினருக்கும், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ ரெஜினால்டு மீது சிலர் தாக்குதல் நடத்தினர். தேர்தலின் போது எதிர்தரப்புக்கு ஆதரவாக ரெஜினால்டு செயல்பட்டதாக சுரேஷ்ராஜன் குற்றம் சாட்டியதால் இந்த கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திமுகவினரின் கோஷ்டிப்பூசல் காரணமாக ஆர்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.