2ஜி அறிக்கையை விரைவில் தர சிஏஜியை முரளி மனோகர் ஜோஷி நெருக்கியதாக சர்ச்சை
இதுதொடர்பான குற்றச்சாட்டை தலைமைக் கணக்கு அலுவலகத்தின் அறிக்கைகள் தொடர்பான டைரக்டர் ஜெனரல் (CAG's DG-Report Central) ஆர்.பி. சின்ஹா, துணை தலைமைக் கணக்கு அதிகாரி ரேகா குப்தாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி எழுதிய கடிதம் ஜோஷியை புதிய சர்ச்சைக்கு இட்டுச் சென்றுள்ளது.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தனது அறிக்கையை சிஏஜி தாக்கல் செய்யுமாறு ஜோஷி நெருக்கினார் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, தலைமைக் கணக்கு அலுவலக ஆடிட்டுக்கான முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஆர்.பி.சிங், 2ஜி நஷ்டம் தொடர்பாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராயின் கூற்றை மறுத்து கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். சிங் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டமெல்லாம் ஏற்படவில்லை. அதன் நஷ்ட மதிப்பு ரூ. 2,645 கோடி மட்டுமே என்று கூறியிருந்தார். தனது கூற்றை அவர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன்பும் ஆஜராகி வாக்குமூலமாக அளித்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஜோஷிக்கு சாதகமாக நடந்தாரா ராய்?-காங். கேள்வி:
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், இந்த விவகாரத்தில் பல புதிய உண்மைகள் வெளியாகி வருகின்றன. இதனால் சில புதிய கேள்விகளும் எழுகின்றன. சிஏஜி வினோத் ராய் 2ஜி நஷ்டமாக காட்டிய தொகை மிகைப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. அவசர கதியில் அந்தக் கணக்கீடு செய்யப்பட்டதா என்பதற்கு விளக்கம் தேவை. பொதுக் கணக்குக் குழுத் தலைவரின் தலையீட்டின் பேரில் அந்த தொகை அறிவிக்கப்பட்டதா என்பதும் தெரிய வேண்டியுள்ளது.
போபர்ஸ் பீரங்கி விவகாரத்தில் முன்னாள் தலைமைக் கணக்கு அதிகாரி டி.என்.சதுர்வேதி அறிக்கை தாக்கல் செய்ததை முன்னோடியாக எடுத்துக் கொண்டாரா வினோத் ராய் என்பதும் விளக்கப்பட வேண்டியதாகும். சதுர்வேதி பின்னாளில் பாஜக எம்.பியாகவும், தொடர்ந்து கவர்னராகவும் ஆனவர் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும் என்று கேட்டுள்ளார் திக்விஜய் சிங்.
வினோத் ராய் மறுப்பு
ஆனால் இந்தப் புகார்களை வினோத் ராய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நேற்று அவர் 2ஜி விவகாரத்தை விசாரித்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி வாக்கமூலம் அளித்தபோது ஜோஷி குறித்தும் விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், சிஏஜி அறிக்கையை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் ஜோஷி தனக்கு சாதகமாக மாற்ற முயன்றார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது தலையீடும் இதில் இல்லை. ஜோஷி என்னை நெருக்கவும் இல்லை என்று கூறியுள்ளார்.
வினோத் ராய் அளித்த அறிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான நடைமுறை கையாளப்பட்டதால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார் ன்பது நினைவிருக்கலாம்.