உர விலை விவகாரம்-அழகிரி பதவி விலக தா.பாண்டியன் கோரிக்கை
மதுரை: உர விலை உயர்வுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உர விலையை உயர்த்தி கேபினட் அமைச்சரவை முடிவு செய்த பிறகு, அந்த துறையின் அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். கேபினட் அமைச்சரவை தான் உர நிறுவனங்கள் விலைகளை உயர்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தது. இது கூட தெரியாமல் அமைச்சர் மு.க.அழகிரி இருக்கின்றார். இதற்காக அவர் தனது பதவியை விட்டு விலக வேண்டும்.
கூடங்குளம் அணு உலையை கட்டியது மத்திய அரசு. அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தது மாநில அரசு. அதை நடத்துவதா வேண்டாமா என்பதை இந்த 2 அரசுகளும் முடிவு செய்யட்டும். ஆனால் பொது மக்களின் அச்சங்களை போக்க வேண்டியது இந்த 2 அரசுகளின் கடமையாகும்.
தமிழக மீனவர் பிரச்னைகளில் மத்திய அரசு தீர்வு காணவில்லை. இந்த அரசில் திமுகவும் கூட்டாக உள்ளது. இதை எதிர்க்க வேண்டியது நமது அரசியல் கடமை உள்ளது. எனவே இது குறித்து பரிசீலனை செய்ய திருவாரூரில் நவம்பர் 24 முதல் 26ம் தேதி வரை கட்சியின் கூட்டம் நடைபெறும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிலை என்பது இலங்கை, இந்தியா மீது மறைமுக போர் தொடுத்துள்ளதைப் போன்றது, என்றார்.