கேரள அமைச்சர் கார் மோதி 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரள அமைச்சர் கேசி ஜோசபின் கார் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கேரள கிராம அபிவிருத்தி துறை மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சராக இருப்பவர் கேசி ஜோசப். இவர் நேற்று இரவு டெல்லி செல்வதற்காக திருச்சூரில் இருந்து நெடும்பஞ்சேரி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் அங்கமாலி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென 3 பேர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த அமைச்சரின் கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விஜயன், அங்கமாலியைச் சேர்ந்த சுந்தரேச மேனன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். தாமஸ் அபிரகாம் என்பவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அமைச்சர் கேசி ஜோசப் தனது காரில் ஏற்றிக் கொண்டு அங்குமாலி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அங்குமாலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அமைச்சர் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார்.