மக்கள் நலப் பணியாளர்களை சேர்க்க தமிழக அரசு மறுப்பு- தீர்ப்பை எதிர்த்து அப்பீல்
சென்னை: மக்கள் நலப் பணியாளர்களை இன்றைக்குள் பணியில் சேர்க்க வேண்டும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அப்பீல் செய்கிறது தமிழக அரசு. இதனால் மக்கள் நலப் பணியாளர்கள் யாரும் இன்று பணியில் சேர அனுமதிக்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பதவி மக்கள் நலப் பணியாளர்கள். அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி தற்போதைய அதிமுகஆட்சியிலும் அவர்கள் 3வது முறையாக ஒட்டுமொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இன்று காலைக்குள் மக்கள் நலப் பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் மக்கள் நலப் பணியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர், அவர்களில் எத்தனை பேரை பணியில் சேர்த்துள்ளீர்கள் என்பது குறித்து நாளைக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் அரசுக்கு உத்ததரவிடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகங்களுக்கு வேலையில் சேர வந்தனர். ஆனால் அவர்கள் பணியில் சேர அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு கோரிக்கை வைத்தது. அதில், மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் தொடர்பான நேற்றைய உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய விரும்புவதாகவும், அதை அனுமதிக்குமாறும் கோரப்பட்டது. அதை ஏற்ற உயர்நீதிமன்றம், மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த மனு நாளை விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.