இலவசத்தை நிறுத்தினாலே மத்தியில் கையேந்தத் தேவையில்லை: பொன். ராதாகிருஷ்ணன்
மதுரை: 2ஜி ஊழலில் முக்கியப் பங்கு வகிக்கும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் உடனடியாக பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் தமிழகத்திற்கு வரும்போது அவருக்கு எதிராக பாஜக இளைஞர் அணி போராட்டம் நடத்தும். ஊழலில் தொடர்புடைய அவரை காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
திமுக தான் 2ஜி ஊழலைச் செய்தது என்று புதிதாக பொறுப்பேற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெளிவான அறிக்கை வெளியிட்டார். அறிக்கை வெளியிட்ட கையோடு திமுக தலைவர் கருணாநிதியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பாராட்டியுள்ளார்.
அவர் திமுக தலைவரைப் பாராட்டினாரா அல்லது 2ஜி ஊழலில் காங்கிரஸை காட்டிக் கொடுக்கக் கூடாது என்று கோரினாரா என்பதை தமிழக காங்கிரஸ் தான் கூற வேண்டும். இதற்குப் பிறகும் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்கள் வெளியேற்றப்படுவார்களா என்று ஞானதேசிகன் கூற வேண்டும்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி மதுரைக்கு வந்தபோது குண்டு வைக்கப்பட்டது தமிழகத்தில் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. இது குறித்த விசாரணையில் எங்களுக்கு திருப்தியில்லை. இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது என்ற சந்தேகம் உள்ளது. 1998ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு மற்றும் தற்போது மதுரையில் குண்டு வைத்ததை இணைத்து விசாரணை நடத்த வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று பீதியைக் கிளப்பும் வகையில் மலையாள இயக்குனர் எடுத்துள்ள டேம் 999 படத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். மத்திய அரசு தடை செய்யாவிட்டாலும் அந்த படத்தை தமிழகத்தில் வெளியிட மாநில அரசு தடை விதிக்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது தான் என்று டாக்டர் அப்துல் கலாம், முத்துநாயகம் போன்றோர் அறிக்கை வெளியிட்டும் அதை ஏற்க ஒரு தரப்பினர் மறுக்கின்றனர்.
முல்லைப்பெரியாறு அணை குறித்த பீதி மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை ஆகியவற்றின் பின்னணி குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும்.
அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். சிறப்பு வசதிகளுடன் தனியாருக்கு வழங்கப்படும் மதுக்கடை திட்டத்தை கைவிட்டுவிட்டு, 'பார்'களையும் மூட வேண்டும். இலவசங்களை நிறுத்தினாலே மத்திய அரசிடம் மாநில அரசு கையேந்தத் தேவையில்லை.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் உணர்வுகளைப் பாதிக்காத வகையில் அவர்களின் இருமுடியைச் சோதனை செய்ய வேண்டும். இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உரிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் அறநிலையத் துறை அதிகாரிகளை அரசு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்து 6 மாதம் தான் ஆகிறது. இருப்பினும் ஆட்சியின் செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications