சென்னையில் எலி, நாய் பிடிக்க ஊக்கத் தொகையுடன் இலவச பயிற்சி-மாநகராட்சி
சென்னை: சென்னையை சுகாதாரமான தூய்மையான நகரமாக மாற்றவும், தெரு நாய்கள் மற்றும் எலி, பெருச்சாளிகளைக் கட்டுப்படுத்தவும், பொது நோக்குடைய தனியாரை பயன்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆர்வமுள்ளோருக்கு எலி பிடிக்க பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு கிரேட்டர் சென்னையாக மாறியுள்ளது. பெயர் மாற்றத்திற்கு ஏற்ப மாநகரை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் மாற்ற முதல் மாமன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை நகரில் சுதந்திரமாக உலா வரும் நாய்கள், எலி, பெருச்சாளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெரு நாய் கடியால் "ரேபிஸ்' நோய் பரவும் என்பதால், அவற்றைப் பிடித்து இனப்பெருக்கக் கட்டப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டு, பிடித்த பகுதியிலேயே கொண்டு போய் விடும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது.
எலி மற்றும் பெருச்சாளிகளால் ஏற்படும் தொல்லைகளைக் கட்டுப்படுத்த, கிடங்குகள், காய்கறி அங்காடிகள், உணவு விடுதிகள், குப்பை கொட்டும் இடங்களில் எலியை ஒழிக்க விஷம் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி
இருப்பினும் தெரு நாய்கள் மற்றும் எலி, பெருச்சாளிகளைக் கட்டுப்படுத்த, பொது நோக்குடைய தனியாரை பயன்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, தெரு நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடும் தனியாருக்கு, நாய் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, 25 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. தன்னார்வமுள்ளவர்களுக்கு, நாய் பிடிக்கும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். அவர்கள் பிடிக்கும் நாய்களுக்கு, 50 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தன்னார்வம் கொண்டவர்கள் பிடித்துக் கொடுக்கும் பெருச்சாளி, மற்றும் நகர எலிகளுக்கு, எண்ணிக்கை அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. புதன்கிழமை நடந்த, "கிரேட்டர்' சென்னையின் முதல் மாமன்றக் கூட்டத்தில், இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.